சென்னை: சென்னை பல்கலைக்கழக பதிவாளரை செல்போனில் தொடர்பு கொண்டு ₹35 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள ஏழுமலைக்கு கடந்த சில நாட்களாக மர்ம நபர் ஒருவர் செல்போனில் ஆன்லைன் கால் மூலம் தொடர்பு கொண்டு ₹35 லட்சம் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால், உங்களின் மோசடிகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பதிவாளர் ஏழுமலை, ஆன்லைன் மூலம் சென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் படி அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரின் செல்போன் எண்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக பதிவாளரை மர்மநபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.