சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் அயலகத் தமிழர் தின விழா நடக்கிறது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அயலகத் தமிழர்களுக்கு 8 பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை மூன்றாம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது. நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அயல்நாடுகளில் வாழும் 1400க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள் 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்கிறார்கள். விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை திறந்து வைக்கிறார். மேலும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சிறப்பு நேர்வாக அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்களும் ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல் அமர்வாக நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ‘தமிழின் தொன்மை – தொடர்ச்சி’ குறித்து துறைசார் வல்லுநர்கள் தங்கள் கருத்துகளை பகிர்கின்றனர். அதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து தலைமையில், ‘சிந்து சமவெளி முதல் செயற்கை நுண்ணறிவு வரை – தொலைநோக்கு சிந்தனையும் செயலும்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறும்.
பின்பு, எம்பி கலாநிதி வீராசாமி தலைமையில் அயலகத் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அடையாள அட்டை, காப்பீடு வசதி, திருமண உதவி திட்டம் போன்ற நல திட்டங்கள் குறித்த விவரங்களும், சிறப்பு கலந்துரையாடலும் நடைபெறும். தொடர்ந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் ‘ஒளிரும் எதிர்காலம்-வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பிலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் ‘வணிகத்தில் தமிழர்கள் – வாய்ப்பும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
இரண்டாம் நாளான நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாப்பேருரை நிகழ்த்துவதுடன், ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். முக்கிய நிகழ்வாக ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டு சுற்றுலா சென்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த விழாவில் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்குகிறார். மேலும் எம்பி திருச்சி சிவா “தமிழ் மொழி வளர்ச்சியில் அயலகத் தமிழர்களின் பங்களிப்பு’ குறித்த அமர்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அயலகத்தில் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தல் குறித்த விவாத அமர்வு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடக்கிறது.