சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி துவங்கி வைக்கவுள்ளதாக தகவல்!

சென்னை: சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, வரும் ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019ம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது. தற்போது சென்னை – மைசூர், சென்னை – கோவை என மொத்தம் 23 வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான சுழலும் இருக்கைகள், ஏசி, விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் – திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னை – திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை ரயில்வே வாரியம் தொடங்க திட்டமிட்டுள்ளது. சென்னை – நெல்லை இடையே 660 கி.மீ தொலைவுக்கு இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை – திருநெல்வேலி இடையே 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரயில் இயக்கப்படும் நிலையில் 8:00 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும் நிலையில், திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சென்னைக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தடையும் என்றும், சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 11 மணியளவில் திருநெல்வேலியை சென்றடையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ரயிலானது திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மூன்று நிலையங்களில் நின்று செல்லும் என்றும் கூறப்படுகிறது. வருகிற 6ம் தேதி பிரதமர் மோடி சென்னை – நெல்லை இடையான வந்தே பாரத் ரயிலை தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி கொகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் விமான நிலையத்தில் கைது

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கருணை கொலைக்கு அனுமதி கோரிய மனு நிராகரிப்பு

நண்பர்களுக்கு ஆதாயம் தேடி தருவதுதான் மோடியின் முதன்மை கொள்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு