சென்னையில் மருத்துவக்கட்டிடம் திறந்து வைத்து, மருத்துவ உபகரணங்களை வழங்கி, புதிய மருத்துவக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் இராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் இன்று (07.08.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக்கட்டிடம் திறந்து வைத்து, மருத்துவ உபகரணங்களை வழங்கி, புதிய மருத்துவக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்கள்.

அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனை2020-21 நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அறிவிப்பின்படி, ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் 4ஆம் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறுவை சிகிச்சை அரங்கம், அறுவை சிகிச்சைக்குப்பின் கண்காணிப்பு அறை, அதிதீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவை 25,000 சதுர அடியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனம் CSR நிதியின்கீழ் ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளது. அதில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகணரங்கள் அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனைக்கும், ரூ.10 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ உபகரணங்கள் சென்னை, இராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் – 2023 இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.40.05 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய புதிய 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் தரைதளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்டவை 62,700 சதுர அடி பரப்பில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்-2023 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சீரிய முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ந் தேதி நடைபெற்று 73,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கின்னஸ் சாதனையாக உருபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பதிவுத்தொகை ரூ.3,42,50,000 மற்றும் அரசு பங்களிப்பு நிதியாக நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.6,85,00,000 மொத்தம் ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகள் கொண்டு 62,700 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்தில் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம், கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு, முதல் தளத்தில் உள்நோயாளிகள் பிரிவு, இரண்டாம் தளத்தில் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கங்கள், அறுவை சிகிச்சைக்கு முந்தைய அறை, மீட்பு அறை, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற வசதிகளுடன் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.ப்ரியா, மத்தியசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.ஜெ.சங்குமணி, சென்னை மருத்துவமனைக்கல்லூரி முதல்வர் மரு.தேரணிராஜன், பெருநகர சென்னை மாநகராட்சி மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை பெருநகர மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, மண்டலக்குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன், அரசு கஸ்தூரிபாய் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் (பொ) மரு.சுமதி, இன்போசிஸ் நிர்வாகிகள் உமாதேவி, சூர்யா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு