சென்னை: ஐ.ஜி.க்கள் கண்ணன், நரேந்திரன் நாயரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக காவல்துறை சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர்ஜிவால் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட போலீசாருக்கும் அனுப்பியிருந்தார். அதன்படி, தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது ஐஜி.,க்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த கண்ணன் தென் மண்டல ஐ.ஜி.யாகவும், தென் மண்டல ஐ.ஜி.யாக இருந்த நரேந்திரன் நாயர் வடக்கு மண்டல ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.