சென்னை: சென்னை தினத்தையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் திறந்தவெளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சென்னை 28 மற்றும் மெட்ராஸ் திரைப்படத்தை பல ஆயிரம் பேர் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையின் பிறந்த நாளை ஒரு மாதம் கொண்டாடும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சென்னை 28, மெட்ராஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.
இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை கண்டு ரசித்தவர்களுக்கு திறந்தவெளியில் திரைப்படம் பார்ப்பது வித்யாசமான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். ஏரளமான பெற்றோர் தங்களது இளம் வயதில் கிராமத்தில் படம் பார்த்து ரசித்த அனுபவம் தங்களுக்கும் ஏற்பட்டதாக அவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.