Friday, July 5, 2024
Home » சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

by MuthuKumar

மதுராந்தகம்: சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என தினந்தோறும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை மாநகருக்கு சென்று வருகின்றனர்.

இந்த மின்சார ரயில் பயணம் என்பது பேருந்து போக்குவரத்தை விட மிக எளிதானது, கட்டணம் குறைவானது, பயண நேரமும் குறைவானது, போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய அவசியமில்லை போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான மக்கள் மின்சார ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், பவுஞ்சூர், கடப்பாக்கம், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செங்கல்பட்டு ஜங்ஷன் ரயில் நிலையத்தை வந்தடைகின்றனர். பின்னர், அங்கிருந்து மின்சார ரயில் மூலமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதில், சுமார் 1 லட்சம் பேர் செங்கல்பட்டின் புறநகர் பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை தினந்தோறும் இயக்கப்படும் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளில் சிலவற்றையாகிலும் காலை, மாலை நேரங்களில் மட்டும் செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் மற்றும் மேல்மருவத்தூர் வரை மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ரயில் பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, மதுராந்தகம் ரயில் நிலையத்தை சுற்றிலும் உள்ள கருங்குழி, வேடந்தாங்கல், எல்.எண்டத்தூர், முதுகரை, ஜமீன் எண்டத்தூர், செய்யூர், பவுஞ்சூர், அணைக்கட்டு மற்றும் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள்.

இதேபோன்று மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள அச்சிறுப்பாக்கம், ஒரத்தி, கீழ் அத்திவாக்கம், கயப்பாக்கம், சூனாம்பேடு, சித்தாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள். இதேபோன்று, மதுராந்தகம் செங்கல்பட்டு இடையே உள்ள கருங்குழி, படாளம், ஒத்திவாக்கம், ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கும் வசதியாக இருக்கும்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் சென்னை பெருநகரத்தில் வீட்டு வாடகை உயர்வு, வாகன நெரிசல் போன்ற காரணங்களினால் சென்னையில் இருந்து தங்கள் குடியிருப்பை மாற்றி மதுராந்தகம் மேல்மருவத்தூர் போன்ற பகுதிகளில் குறைந்த வாடகையில் சுகாதாரமான சூழ்நிலையில் குடிபெயர்ந்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் சென்னை சென்று பணிபுரிந்து வீடு திரும்புகிறார்கள். தற்போது இவர்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் இருந்து சாலை மார்க்கமாக மேல்மருவத்தூர் மதுராந்தகம் வழியாக பேருந்துகளிலும், இருசக்கர வாகனங்களிலும் செங்கல்பட்டு வரை சென்று அங்கிருந்து ரயில் பிடித்து சென்னை செல்கின்றனர்.

மீண்டும், சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் இந்த மின்சார ரயில் சேவையினை செங்கல்பட்டின் தொடர்ச்சியாக அங்கிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிற்கு மேல்மருவத்தூர் வரை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்களின் நலம் கருதி ரயில்வே நிர்வாகம் மின்சார ரயில் சேவையினை காலை மாலை நேரங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரங்களில் மட்டும் சென்னை முதல் செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பக்தர்களுக்கு…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் இன்று இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இதன் காரணமாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் சேவை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்கப்பட்டால் ஆன்மீக பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

எந்த பயனும் இல்லை
அரக்கோணத்தில் இருந்து விழுப்புரம் வரை தற்போது ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 11 மணியளவில் மதுராந்தகம் வருகிறது. அதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் செல்கிறது. பின்னர் மாலை 3 மணி அளவில் மேல்மருவத்தூர், மதுராந்தகம் கடந்து அரக்கோணம் நோக்கி செல்கிறது. இந்த பொருத்தம் இல்லாத நேரத்தினால் இந்த மின்சார ரயிலில் மூலம் மேல்மருவத்தூர், மதுராந்தகம் பகுதியில் இருந்து வேலை மற்றும் படிப்பு காரணமாக சென்று வருபவர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

100 கிமீ தூரம்
மின்சார ரயில் சேவை என்பது அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இயக்கப்பட வேண்டும் என ரயில்வே சட்ட விதிகளில் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால் சென்னை கடற்கரையில் இருந்து மேல்மருவத்தூர் வரை 93 கிலோ மீட்டர் தூரமே உள்ளது. எனவே, ரயில்வே துறையின் விதிகளின்படி அவர்கள் நிர்ணயித்துள்ள தூரத்திற்கு மிக குறைவான தூரத்திலேயே மதுராந்தகம், மேல்மருவத்தூர் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

thirteen + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi