Friday, September 6, 2024
Home » செங்கல்பட்டு அருகே பரபரப்பு பள்ளியில் இருந்து மாணவன், மாணவி காரில் கடத்தல் ? போலீசார் தீவிர விசாரணை

செங்கல்பட்டு அருகே பரபரப்பு பள்ளியில் இருந்து மாணவன், மாணவி காரில் கடத்தல் ? போலீசார் தீவிர விசாரணை

by Ranjith

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலன் (31). இவருக்கு ஆர்த்தி (30) என்ற மனைவியும், ரக்சிதா (11), நித்தின் (7) ஆகிய மகனும், மகளும் உள்ளனர். வேலன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், ஆர்த்தி செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் வேலனின் அரவணைப்பில் உள்ள குழந்தைகள் இருவரும் ஒழலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல பள்ளிக்குச் சென்றனர். மதிய உணவு இடைவேளையின் போது, காரில் வந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசியிடம் சென்றுள்ளனர். அப்போது தான் வேலனின் தங்கை என்றும், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்துள்ளதால் குழந்தைகளை காண வேண்டும் என அப்பெண் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குழந்தைகளை பார்ப்பதற்கு அனுமதித்துள்ளார். தொடர்ந்து சிறிது நேரத்தில் அங்கிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் சேர்ந்து வேலனின் குழந்தைகளான ரக்சிதா, நித்தின் ஆகிய இருவரையும் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, பள்ளிக்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதாசிவம் மற்றும் தனிப்படை போலீசார் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளிக்கு வந்த வேலனின் உறவினர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வேலனின் மனைவி ஆர்த்தி தனது குழந்தைகளை அழைத்துச் சென்றாரா? அல்லது வேறு யாராவது கடத்திச் சென்றார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi