அப்போது, அவர் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் இரண்டுமே ஏராளமான விளையாட்டு வீரர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் வழங்கி உள்ளது. அடுத்த வருடம் நடக்க உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு நிச்சயமாக முதல் இடம் அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. 2009 முதல் தமிழ்நாடு சார்பாக பல்வேறு சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் நீச்சல் போட்டி சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு இதுவரை 101 பதக்கங்கள் வென்றுள்ளார் சகோதரர் தனுஷ்.
தனுஷ் மாதிரியான விளையாட்டு வீரர்களால் தமிழ்நாடு நிச்சயம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக உருவெடுக்கும் என்பதில் எனக்கும் கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு தொடர்ந்து நாங்கள் உதவிகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.