செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 186 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமில், 46 தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 369 ஆண்கள், 427 பெண்கள், 14 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 810 பேர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் 204 பேர் தேர்வு செய்யபட்டனர். மேலும், திறன் பயிற்சிக்காக விருப்பம் தெரிவித்த 13 நபர்கள் பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 80 ஆண்கள், 106 பெண்கள் என மொத்தம் 186 வேலைநாடுநர்களுக்கான பணி ஆணைகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.