செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இருக்க கூடிய பரனூர் சுங்கசாவடியை முழுமையாக இழுத்து மூடவேண்டும் என வலியுறுத்தி மதச்சர்பற்ற ஜனநாயக கட்சி சார்பாகவும், லாரி உரிமையாளர்கள் சங்கம், வணிகர் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சமுக ஆர்வளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பரனூர் சுங்கசாவடி அருகே ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டபடி பெருந்திரள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2019-ம் ஆண்டே இந்த பரனூர் சுங்கசாவடி காலாவதியாகிவிட்டது. எனவே இந்த பரனூர் சுங்கசாவடியை முழுமையாக அகற்ற வேண்டும். அதேபோல் ஒன்றிய அரசு கூறியது போல் 60 கி.மீ இடைவேளியில் தான் சுங்கசாவடிகள் அமைக்கவேண்டும். ஆனால் குறைவான தூரத்தில் சுங்கசாவடிகள் அமைக்கபட்டுள்ளது என கூறி பரனூர் சுங்கசாவடியில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். முதல்கட்டமாக இந்த போராட்டம் காவல்துறையினரின் அனுமதி பெற்று நடத்தப்படுகிறது. தொடந்து இந்த சுங்கசாவடி அகற்றப்படவில்லை என்றால், 1000-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, இந்த சுங்கசாவடியை அடித்து நொருக்குவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.