செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் வயது(32). இவர் 2015ம் ஆண்டு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். தாம்பரம் உள்ளிட்ட மூன்று காவல் நிலையங்களில் லோகேஷ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
இன்றைய தினம் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பீர்க்கன்காரணை காவல் நிலையத்தின் கொலை வழக்கு சம்மந்தமான விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்றம் அருகே இருக்க கூடிய கடையில் அமர்ந்திருந்த போது 5 பேர் கொண்ட மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை லோகேஷ் மீது வீசி அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.
இதன் தொடர்ச்சியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லோகேஷை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் லோகேஷ் அனுமதிக்கப்பட்டு மருத்துவருடைய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இதன் பின்னணி யார்? எந்த வழக்கில் தொடர்புடையவர்கள், எந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்விரோதம் காரணமாக இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை வெட்டி தப்பிய 5 பேருக்கு போலீசார் வலை வீசிவருகின்றனர்.