சென்னை: செம்பரம்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மாடு ஒன்று வந்ததால் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளாகின. சென்னை புறநகர் பகுதிகளில் சாலையில் கால்நடைகள் திரிவது வழக்கமாகி வருகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே மாடு ஒன்று குறுக்கிட்டதால் விபத்து நேரிட்டுள்ளது. முன்னே சென்ற கார் மாட்டின் மீது மோதி நின்றுள்ளது. இதன் காரணமாக காரின் பின்னால் வந்த மற்றொரு கார், பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இரண்டு கார்களுக்கும் இடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.