பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வி (45). இவரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளநிலையில் 20 வருடங்களுக்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக ஆறுமுகம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு செல்வி புரசைவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார்.

அதன் பிறகு புளியந்தோப்பு கனகராயத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி (60) என்பவருடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். சுப்பிரமணிக்கும் ஏற்கனவே திருமணமாகி தனியாக குடும்பம் உள்ளது. இருந்தபோதும் சுப்பிரமணி செல்வியுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். செல்வியின் பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுக்கு திருமணம் முடிந்தநிலையில் செல்வி கொஞ்சம் கொஞ்சமாக சுப்பிரமணியுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வரவேண்டாம் எனக் கூறி வந்துள்ளார். மேலும் சுப்ரமணியுடன் பேசுவதையும் நிறுத்தினார். ஆனால் சுப்பிரமணி தொடர்ந்து செல்வியுடன் பேச முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி தனது மகளை கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக நேற்று செல்வி ஓட்டேரி பகுதிக்கு வந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த சுப்பிரமணி நேற்று மதியம் செல்வியின் மகள் வீட்டிற்கு வந்து செல்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது இருவரும் மீண்டும் கணவன், மனைவி போல சேர்ந்து வாழலாம் என சுப்பிரமணி செல்வியிடம் கூறியுள்ளார். இதற்கு செல்வி, ‘‘வேண்டாம்… பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள், நீங்கள் உங்களது வழியை பார்த்துக் கொள்ளுங்கள்’’ எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செல்வியின் தலையில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ பற்றி எரிய ஆரம்பித்ததும் செல்வி அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடியுள்ளார். இதில் சுப்பிரமணி மீது பெட்ரோல் பட்டு, அவர் மீதும் தீ பற்றியது. இருவரும் தீயில் எரிந்துள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த செல்வியின் மருமகன் தனது மாமியார் செல்வியின் தீயை அணைக்க முற்பட்டார். அப்போது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பின்னர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து, 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு செல்வி 90 % தீக்காயங்களுடன் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுப்பிரமணி மற்றும் செல்வியின் மருமகன் ஆகிய இருவரும் 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கள்ளக்காதல் விவகாரத்தில் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு