திருச்சி: முசிறி அருகே கள்ளக்காதலனுடன், ஆசிரியை தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த காட்டுப்புத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிமலை. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி(29). ஐடிஐ படித்து விட்டு விவசாய வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. காட்டுப்புத்தூர் அடுத்த சீத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா(23). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 5 வயதில் மகள் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கீர்த்தனா தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும், கீர்த்தனாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இது இரு வீட்டுக்கும் தெரியவந்ததால் கண்டித்தனர். இதனால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர். அதன்படி கிருஷ்ணமூர்த்தி, கீர்த்தனா இருவரும் காட்டுப்புத்தூர் அருகே தனியார் ரைஸ் மில் அருகில் உள்ள மோட்டார் கொட்டகையில் தனித்தனி கயிற்றில் நேற்று பிற்பகல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.