சிவகங்கை: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது. உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதியுலா நடந்தது. 2ம் நாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
18ம் தேதி காலை திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். மாலை 4 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். 10ம் திருநாளான செப். 19ம் தேதி காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். பகல் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.