இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூ.8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 04.04.2022 அன்று முதற்கட்டமாக ரூ.5.08 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 69 புதிய வாகனங்களையும், 17.12.2022 அன்று இரண்டாம் கட்டமாக ரூ.1.56 கோடி செலவிலான 19 புதிய வாகனங்களையும் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று ரூ.1.13 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 14 புதிய வாகனங்களை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.