புதுடெல்லி: ஒன்றிய அரசு செயலாளர்கள் மட்டத்திலான அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, ஒன்றிய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அமைச்சரவையின் செயலாளர்(ஒருங்கிணைப்பு) பிரதீப் குமார் திரிபாதி, லோக்பால் செயலாளராகவும், எல்லை மேலாண்மை துறை செயலாளர் ராஜ்குமார் கோயல் சட்டம் மற்றும் நீதி துறையின் செயலாளராகவும், ஊழியர்கள் மாநில காப்பீட்டு கழகத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜேந்திர குமார், எல்லை மேலாண்மை துறை செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்.
அதே போல் புது டெல்லி மாநகராட்சி கவுன்சில் அதிகாரி அமித் யாதவ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் சிறப்பு அதிகாரியாகவும், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சிறப்பு செயலாளர் ராகேஷ் ரஞ்சன் பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.