விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் – 3 செயற்கைக்கோள் சீராக செயல்படுகிறது!: இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நாட்களான நிலையில், செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 (எல்எம்-3) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த 16வது நிமிடத்தில் 179 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிலவின் தென் துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்திரயான் – 3 செயற்கைக்கோள் தனது முதல் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், ‘தற்போது 41762 கி.மீ x 173 கி.மீ சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் – 3 செயற்கைக்கோள் சுற்றி வருகிறது. மேலும் செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருகிறது. அடுத்த 40 நாட்கள் தொடர் பயணத்திற்கு பின்னர் ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான் – 3 செயற்கைக்கோள் நிலவை சென்றடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!