31 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் சந்திரபாபு நாயுடு: எம்எல்ஏவாக பதவி ஏற்பு

திருமலை: ஆந்திர மாநில சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் கூட்டத்தொடரில் தற்காலிக சபாநாயகர் புச்சையா சவுத்ரி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதலில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இதனை தொடர்ந்து துணை முதல்வர் பவன் கல்யாண், அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், பின்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட அனைத்து எம்எல்ஏக்களும் ஒவ்வொருவராக பதவி ஏற்றுக் கொண்டனர்.

கடந்த 2021 ஆண்டு நவம்பர் 21ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை ஏளனமாக பேசி கிண்டல் செய்தனர். இதனால் மனமுடைந்த சந்திரபாபு நாயுடு கவுரவமான சட்டப்பேரவையில் ஏளனமாக கேலி கிண்டல் செய்து சட்டப்பேரவைக்கும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் இந்த அவைக்கு முதல்வராக மட்டுமே வருவேன் என்று கூறி சபதம் மேற்கொண்டு வெளியேறினார்.

அதன் பிறகு தற்போது தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்று 31 மாதங்களுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் சென்றார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் கவுரவ சபை என்று நிரூபித்த சந்திரபாபு, நிஜம் வென்றது, ஜனநாயகம் வென்றது என கோஷமிட்டு அவரை வரவேற்றனர். இதனையடுத்து துணை முதல்வர் பவன்கல்யாண் முதல்வர் சந்திரபாபுவை கட்டித் தழுவி வரவேற்றார். ஏற்கனவே சந்திரபாபு சபதம் எடுத்த வீடியோவும் தற்போது சட்டப்பேரவைக்குள் முதல்வராக நுழையும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

* மீனவன் வேடத்தில் வந்த எம்எல்ஏ
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரம் தொகுதியில் ஜனசேனா கட்சி சார்பில் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் பொம்மிடி நாயக்கர். மீனவ குடும்பத்தில் பிறந்து மீனவ சமூதாயத்தில் வளர்ந்து முதல்முறையாக சட்டப்பேரவைக்கு செல்வதால் மீனவர் வேடமணிந்து பொம்மிடி நாயக்கர் மீன், வலையுடன் மீனவனாக புதுமையான முறையில் சட்டசபைக்குள் சென்றார்.

Related posts

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை