விஜயவாடா: ஜூன் 12 ம் தேதி ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கூட்டணியில் இடம் பெற்ற ஜனசேனா 21 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது.
சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக 8ம் தேதி பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடுவின் பதவி ஏற்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை சந்திரபாபு நாயுடு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார். ஜூன் 8ம் தேதி பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்கவுள்ளதால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.