டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். 2014-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச சட்டப்படி நிதியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். 2023 மார்ச் இறுதி நிலவரப்படி ஆந்திர அரசின் கடன் ரூ.4,42,442 கோடியாக உயர்ந்துவிட்டது. ஆந்திர மாநில அரசின் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.55,817.50 கோடியாக உயர்ந்துவிட்டது.
2018-19-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஆந்திர மாநிலத்தின் நிதி பற்றாக்குறை 55% உயர்ந்துள்ளது. கடன்களை சமாளிக்க ஒன்றிய அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிதி, அமராவதி நகரை ஆந்திர தலைநகராக கட்டி எழுப்ப நிதி தர வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.