அதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு டெல்லி சென்ற சந்திரபாபு, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தொகுதியில் 6 இடங்களும், சட்டமன்ற தொகுதிகளில் 10 முதல் 12 இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க சந்திரபாபு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுள்ளார். மாநில உரிமைகள் மற்றும் நிதி பங்களிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க செல்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆந்திர அரசியல் நிலை குறித்தும், சில தகவல்கள் தெரிவிக்கவும், சந்திரபாபுவை பாஜக கூட்டணியில் சேர்க்கவேண்டாம் என வலியுறுத்தவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பாஜ மேலிடத்தை போட்டிப்போட்டு சந்தித்து வரும் சூழல் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவரும், ஜெகன்மோகனின் தங்கையுமான ஷர்மிளா, ஏலூர் மாவட்டம் தொண்டலூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
முதல்வராக இருந்து ஜெகன்மோகன் கடந்த 5 ஆண்டுகளில் சாதித்தது என்ன? பாஜகவுக்கு எதிராக அவர் ஒருநாள் கூட வாய் திறந்ததில்லை. ஆந்திர சட்டமன்ற கூட்டத்தில் மத்திய அரசுடன் நல்லுறவு இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் பேசுகிறார். அப்படியிருக்கும்போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை கேட்டு பெறாமல் உள்ளது ஏன்? பாஜவுடன் ஜெகன்மோகன், சந்திரபாபு ஆகியோர் போட்டிப்போட்டு நட்பு பாராட்டுகின்றனர். பாஜவை திட்டி ஒருநாள் கூட சந்திரபாபு பேசியதில்லை. அமித்ஷா அழைத்த உடனே டெல்லிக்கு ஓட்டம் பிடிக்கிறார்.
சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் கூட்டணி வைப்பேன் என சவால் விடும் தைரியம் இல்லாதவர் சந்திரபாபு.அவர் ஆந்திர மாநில பாஜக தொண்டராகவே மாறிவிட்டார். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால் மாநில மக்கள் பாதிக்கப்படுவது குறித்து இவர்களுக்கு அக்கறை இல்லை. இருவரும் பாஜவின் கைக்கூலியாக மாறிவிட்டனர். டெல்லிக்கு சந்திரபாபு சென்றார். அவரை தொடர்ந்து ஜெகன்மோகன் செல்கிறார். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பாஜகவின் அடிமையாகவே மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.