2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்: 8 அணிகள் பட்டியல் வெளியீடு.! நூலிழையில் வாய்ப்பை இழந்த இலங்கை

மும்பை : 2023 உலகக்கோப்பை லீக் சுற்றின் முடிவில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கப் போகும் 8 அணிகள் பட்டியல் முடிவாகி உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இரண்டு தொடர்களை நடத்தி வருகிறது. ஒன்று உலகக்கோப்பை தொடர் மற்றொன்று சாம்பியன்ஸ் டிராபி எனப்படும் தொடர். இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 8 அணிகள் ஒருநாள் போட்டி தரவரிசைப் படி தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும் எனவும், சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஏற்று 2025ல் நடத்த உள்ள பாகிஸ்தான் அணி நேரடி தகுதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்டி 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5ம் இடத்தில் இருக்கும் நிலையில், அந்த அணியை விடுத்து முதல் 8 இடங்களில் இருக்கும் மற்ற ஏழு அணிகள் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுள்ளன. 2025 சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க உள்ள 8 அணிகள் (புள்ளிப் பட்டியல் வரிசைப்படி) – இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் நூலிழையில் சாம்பியன்ஸ் டிராபி வாய்ப்பை தவறவிட்டன. புள்ளிப் பட்டியலில் வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து என மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தாலும் நெட் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 0.3 என்ற வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. அதனால், 8வது இடம் பிடித்து சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றுவிட்டது. 1996 உலகக்கோப்பை. 2002 சாம்பியன்ஸ் ட்ராபி, 2014 டி20 உலகக்கோப்பை என மூன்று முக்கிய கோப்பைகளை வென்ற இலங்கை அணி, 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி கூட பெறவில்லை என்பது பேசுபொருள் ஆகி இருக்கிறது.

Related posts

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது: ரூ.48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி