தேர்தலுக்கு பின்னர், கட்சி நிகழ்ச்சியில் பெரிய அளவில் அண்ணாமலை கலந்துகொள்ளவே இல்லை. தனியார் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொள்கிறார். அப்படி தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது மன உளைச்சலின் வெளிப்பாடாகவே கருத்து தெரிவித்து வருகிறார். சென்னையில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஒரு பதவியில் அமர்ந்துள்ளேன். பல நேரங்களில் இந்த அரசியலில் இருக்கணுமா என்று யோசிப்பேன். காரணம் மனதில் தினமும் சஞ்சலம் இருக்கும். சாதாரண மனிதர்களை போல் பேச முடியாது. இவர் சரி, இவர் சரியில்லை என்று சொல்ல முடியாது. நம்மை பற்றி தவறாக ஒருத்தர் புரிந்து கொண்டு திட்டினால் கூட பொறுத்து கொண்டு தான் போக வேண்டும் என பேசினார்.
இவ்வளவு நாளாக, நான் சாதாரண தொண்டன் கிடையாது. அண்ணாமலை இட்லி, தோசை சுட வரவில்லை என வசன மொழிகளை பேசிய அண்ணாமலை, கடந்த சில நாட்களாக நான் சாதாரண தொண்டன் என தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வது போல் நாடாகமாடி வருகிறார். இப்படி தனக்கு எதிரி வெளியே இல்லைடா, என்கூடவே இருக்காங்க என்ற மன உளைச்சலுக்கு ஆளான அண்ணாமலை, கட்சிப் பணிகளை முறையாக கவனிக்க முடியாததால், அவரது தலைவர் பதவியே பறிக்கப்படுவதாகவும், அடுத்த தலைவர் யார் என பாஜ மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் புலம்பி தவித்து, சுற்றுலா தலங்களுக்கும், பொழுது போக்குகாக விளையாடியும் மனதை கூலாக்கி வருகிறார் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.