Saturday, July 6, 2024
Home » செயின் பறித்த திருடனை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த தம்பதி: படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

செயின் பறித்த திருடனை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த தம்பதி: படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை

by Karthik Yash

சென்னை: அரக்கோணம் அருகே செயின் பறித்த திருடனை பிடிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (33). இவரது மனைவி ஹேமமாலினி (29). இவர்கள் ேநற்று சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். பின்னர் அவர்கள், மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக ஆவடி ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் இருவரும் ஏறி பயணம் செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் இந்த மின்சார ரயில் நின்று மீண்டும் புறப்பட்டது.

அப்போது எதிர்பாராத நிலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென வினோத் கழுத்தில் இருந்த செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு ஓடும் மின்சார ரயிலில் இருந்து எகிறி குதித்து பிளாட்பாரத்தில் ஓடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வினோத் உடனடியாக ரயிலில் இருந்து குதித்து மர்ம நபரை பிடிக்க முயன்றார். இதற்கிடையில், கணவர் ரயிலில் இருந்து குதித்ததை பார்த்ததும் மேலும் அதிர்ச்சி அடைந்த ஹேமமாலினியும் ஓடும் ரயிலில் இருந்து குதித்து, கணவரை காப்பாற்ற முயன்றார். இதில் கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வரும் வினோத் மற்றும் அவரது மனைவி ஹேமமாலினியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

ஹேமமாலினி ரயிலில் இருந்து குதிக்கும்போது அவர் வைத்திருந்த பை, செல்போன் போன்றவற்றை ரயிலிலேயே விட்டுவிட்டார். அப்போது, பயணி ஒருவர் ரயில் பெட்டியில் இருந்த செல்போன், பை மற்றும் செயினை பறித்தபோது துண்டாகி விழுந்து கிடந்த செயின் ஒரு பகுதியை மீட்டு பத்திரமாக அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓடும் ரயிலில் பயணிடம் 4சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

twelve + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi