செங்கல்பட்டு: சோகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மனைவி காமாட்சி (55). இவர், நேற்று முன்தினம் செங்கல்பட்டில் உள்ள அய்யப்பன் கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் தரிசனம் செய்துவிட்டு தனது மருமகள் சுபாஷினியோடு இருசக்கர வாகனத்தில் சோகண்டியை நோக்கி சென்றுள்ளார். அழகுசமுத்திரம் பொன்னியம்மன் கோயில் அருகில் சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்தவாறு வந்த 2 மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்டது, சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (22), புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (22), ஆத்தூர் அண்ணாநகரை சேர்ந்த கிஷோர் (20) என்பது தெரிய வந்தது. பின்னர், மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.