ஐடி ஊழியர்களை ஈர்க்கும் அசத்தல் மெஸ்!
பழைய திரைப்படங்களில் வாழ்க்கையில் வெற்றி பெறும் நாயகனுக்கு ஒரு ப்ளாஷ்பேக் இருக்கும். ஒரு கடையில் வேலை செய்வார். பின்பு அந்தக்கடையையே வாங்கி நடத்தி, கடையில் பல மாற்றங்களைச் செய்து வெற்றி பெற்றுக்காட்டுவார். அதுபோன்ற கதை ராஜேந்திரனுக்கும் இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கிராமப் பகுதியில் இருந்து வீட்டுக்குத் தெரியாமல் சென்னை வந்த ராஜேந்திரன், மெரீனா பீச்சில் ஒரு வண்டிக்கடையில் வேலை பார்த்திருக்கிறார். பின்னர் சில ஓட்டல் கடைகளில் வேலை பார்த்த இவர் இப்போது திருவான்மியூர் பகுதியில்செட்டிநாட்டு ஸ்டைலில் ஒரு அசத்தலான மெஸ்சை நடத்தி வருகிறார். அவரைச் சந்தித்தபோது மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “ ஒரு சில குழந்தைகள் அப்பா, அம்மா திட்டியவுடன் வீட்டை விட்டு ஓடிவந்துவிடுவார்கள். அப்படி சென்னைக்கு வந்தவர்களில் நானும் ஒருவன். என்னுடைய அப்பா முத்து என்னை திட்டியதால் நான் சென்னைக்கு 1990ம் ஆண்டில் ஓடி வந்துவிட்டேன். அப்போது எனக்கு 13 வயது. வீட்டில் நான் சேர்த்து வைத்திருந்த 200 ரூபாயை எடுத்துக்கொண்டு இங்கு வந்துவிட்டேன். ஆனால் சென்னையில் யாரையும் தெரியாது. எங்கு செல்வது என்றுகூட தெரியாது.
இப்படி இருந்த எனக்கு அடைக்கலம் கொடுத்தது சென்னை மெரீனா பீச்தான். நான் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவானது. சாப்பிடுவதற்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் மெரீனா பீச்சில் அலைந்து திரிந்தேன். சுமார் 6 நாட்கள் வரை பட்டினி கிடந்தேன். அப்போது மெரீனா பீச்சில் இருந்த ஒரு வண்டிக் கடையில் வேலைக்கு சேர்ந்தேன். சாப்பாடு போட்டு கூலி கொடுத்தார்கள். சிறிது காலம் அங்கு வேலை செய்தேன். சிறிய வயது என்பதால் சமைப்பது பற்றி அறிந்துகொள்வது கூட சிரமமாக இருந்தது. பிற்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள், மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்காமல் செல்ல மாட்டார்கள். அப்படி வருபவர்கள் நான் வேலை செய்யும் உணவகத்திற்கு வந்து சாப்பிடுவார்கள். அதில் ஒருவர் என் உழைப்பைப் பார்த்து கரூர் மாவட்டத்தில் உள்ள தனது உணவகத்திற்கு என்னை வேலை செய்ய அழைத்துச் சென்றார். கரூர் லஷ்மி திரையரங்கு அருகில் இருந்த அவருடைய உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்குதான் முதன்முதலில் நான் பரோட்டா தயார் செய்யக் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும்போது அவர் என்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
மூன்று ஆண்டுகள் கழித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள எனது வீட்டிற்கு நேரடியாக சென்று என்னுடைய அப்பாவிடம் நான் கரூரில் இருப்பதாக தெரிவித்தார். பதறி அடித்துக்கொண்டு அப்பா என்னைப் பார்க்க வந்தார். அக்கா லட்சுமியும் அவருடன் வந்திருந்தார். மூன்று பேரும் என்னை சமாதானப்படுத்தி மீண்டும் ஊருக்கு அழைத்து சென்றார்கள். சிறிது காலம் அங்கிருந்த நான் அப்பாவிடம் சொல்லிவிட்டு மீண்டும் சென்னைக்கே வந்தேன். அடையாரில் இருந்த ஒரு சைவ உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சப்ளையராக வேலை பார்த்தேன். அங்குதான் சாம்பார், சட்னி, பொரியல், கூட்டு, ரசம், வடை என்று அனைத்தையும் செய்யக் கற்றுக்கொண்டேன். சாப்பாடு கொடுத்து தங்குவதற்கு இடம், மாதச்சம்பளம் என்று கொடுத்தார்கள். அதன்பிறகு திருவான்மியூரில் இருந்த ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இட்லி, தோசை, கொத்து பரோட்டா, மட்டன் சுக்கா, போட்டி, ஈரல், சிக்கன் ப்ரை என்று அனைத்து டிஷ்களையும் நானே தயார் செய்யத் தொடங்கினேன். இந்த உணவகத்தில் சாப்பிட்ட பலர் என்னை நேரில் அழைத்து பாராட்டுவார்கள். அந்தப் பாராட்டுதான் எனக்கு, புதிய உணவகம் ஒன்றைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது.
திருவான்மியூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு வண்டிக்கடையைத் தொடங்கினேன். அதில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் டிபன் கொடுத்தேன். இரண்டு வருடங்கள் உணவகம் சிறப்பாக நடந்து வந்தது. ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறி உணவகத்தை அகற்றி விட்டார்கள். பொருளாதார நெருக்கடி. மீண்டும் திருவான்மியூரில் ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சிறிது காலம் அங்கேயே வேலை செய்து வந்தேன். அப்போது அந்த உணவகத்தை நடத்தி வந்தவர், ஒரு புதிய உணவகம் தொடங்கப் போவதாகக் கூறினார். உடனே, அந்த உணவகத்தை நானே எடுத்து நடத்திக் கொள்கிறேன் என அவரிடம் தெரிவித்தேன். அவரிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் விலைக்கு வாங்கினேன். உணவகம் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளரான முருகன் என்பவரிடம் நேரடியாக பேசி தொடர்ந்து உணவகத்தை நடத்த வந்தேன். உணவகத்தின் பெயரை “முத்துலட்சுமி” என்று மாற்றினேன். நான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் என்னுடைய அப்பாவும், அக்காவும். அதன் காரணமாக அவர்களின் பெயரையே உணவகத்திற்குப் பெயராக வைத்தேன். கிட்டத்தட்ட 18 வருடமாக முத்துலட்சுமி உணவகத்தை நடத்தி வருகிறேன்.
முதலில் டிபன் மட்டும் கொடுத்து வந்த நான், தற்போது மதிய உணவும் கொடுத்து வருகிறேன். சிக்கன், நண்டு, கனவா, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்து டிஷ்சையும் எங்களது உணவகத்தில் வழங்கி வருகிறோம். இவை அனைத்துமே செட்டிநாட்டு ஸ்டைல்தான். நான் ஒவ்வொரு உணவகங்களிலும் கற்றுக்கொண்ட டிஷ் அனைத்தையும் என்னுடைய உணவகத்தில் தயார் செய்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகிறேன். அருகில் இருக்கும் டைடல் பார்க்கில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள் இங்குதான் தங்களது மதிய உணவைச் சாப்பிடுகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், அரசு வேலைக்குப் படித்து வரும் மாணவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் எங்களது உணவகத்தைத் தேடி வருகிறார்கள்.இரவில் இட்லி, தோசை வெரைட்டி மட்டுமில்லாமல் வாழை இலை பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, இறால் கொத்து பரோட்டா, கனவா கொத்து பரோட்டா, சைவ வாழை இலை கிழி பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சிக்கன் வீச்சு பரோட்டா, காயின் பரோட்டா, மட்டன் லாப்பா, முட்டை லாப்பா, சிக்கன் லாப்பா, இறால் லாப்பா என பல வெரைட்டிகள் கொடுத்து வருகிறோம்.
சிலோன் ஸ்டைல் லாப்பா எங்களது உணவகத்தில் ரொம்ப பேமஸ். ஏற்கனவே தயார் செஞ்சு வெச்சு இருக்க மைதா மாவுல மசாலவ ஸ்டப் பண்ணி அத மிதமான தீயில தோசைக் கல்லு மேலப் போட்டு எடுப்போம். இப்படி பரோட்டாவை மிதமான தீயில வேக வைக்கிறதால உள்ள இருக்கிற மசாலா எல்லா இடத்துலயும் பரவலா பரவும். இதனால ருசி அட்டகாசமா வரும். இதனால், லாப்பா சும்மா மொறு மொறுவென வரும். இந்த லாப்பாவை இலையில் பிய்த்துப் போட்டு அதோடு சால்னாவையோ, பாயோவையோ சேர்த்து வைத்து சாப்பிடும்போது அதன் சுவையே அல்டிமேட்டாக இருக்கும். லாப்பாவில் சிக்கன், மட்டன், இறால்னு வாடிக்கையாளர்கள் கேட்கும் ஸ்டைலில் கொடுப்போம். சால்னாவில் சிக்கன், மட்டன் கொடுப்பதோடு, சைவப் பிரியர்களுக்காக வெஜ் குருமாவும் கொடுத்துட்டு இருக்கோம். 6 நாட்கள் பட்டினியாக இருந்த நான் இன்றைக்கு என்னைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட் சாப்பாடு தருகிறேன். அதையும் நானே தயார் செய்து கொடுக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசினார் ராஜேந்திரன்.
– சுரேந்திரன் ராமமூர்த்தி.