டெல்லி: நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA கூட்டணி அரசு 3வது முறை ஆட்சியமைத்து இன்று 100வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை ஒட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் உள்துறை அமைச்சர்:
மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவிக்கும் போது அனைத்து விவரங்களையும் பகிரங்கப்படுத்துவோம். இந்தியா 1881ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. அதன்படி முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1, 2020 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசின் கொள்கைகள், மானியங்கள் வழங்கப்பட்டுவருகிறது.
தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்த அரசின் ஆட்சிகாலத்தின்போதே ஒரேநாடு ஒரேதேர்தல் முறை அமல்படுத்தப்படும். ஒரேநாடு ஒரேதேர்தலை சந்திக்க நாடு முன்வரவேண்டும். பா.ஜ.க. அரசு பதவி ஏற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைத்துள்ளன. நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக்கூடாது என்பதே எங்கள் இலக்கு என கூறினார்.