டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளை ஒன்றிய அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரம் இதில் சாதி விவரங்களை கேட்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
ஆனால், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பினால் தொடங்கப்படவில்லை. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள 12,000 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்துவதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்.
சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எடுக்கப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புதிய தரவுகள் கிடைக்காத நிலையில் அனைத்து அரசு திட்டங்களும் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே செயல்படுத்தப்படுகின்றன.