தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி சேதுராஜா தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன்(40). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன், முதலமைச்சர் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தற்போது நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 8 மணியளவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரது சித்தியை பார்க்க ஆறுமுகநேரி கணேசபுரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர், காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது சட்டைப் பையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இதில் அவருக்கு இடது மார்பு முதல் முகம் வரை தீக்காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அவரை உறவினர்கள் மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.