நாமக்கல்: செல்போன் பறித்து தப்பிய 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் நவீன் (31) மற்றும் அவரது நண்பர் சென்னையை சேர்ந்த மாரி (25) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் டூவீலரில் நாமக்கல்-மோகனூர் சாலையில், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே சென்றனர். அப்போது, நவீன் மற்றும் மாரி டூவீலரில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது போல் நடித்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி பொன்னார் (31) என்பவர் இருவருக்கும் உதவச் சென்றார். அப்போது, இருவரும் சேர்ந்து பொன்னாரை மிரட்டி, அவரிடமிருந்த செல்போன், பணத்தை பறித்துக் கொண்டு டூவீலரில் தப்பிச் சென்றனர். டூவீலரில் அதிவேகமாக சென்றதால், சிறிது தூரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் மாரி, நவீன் பலத்த காயமடைந்து, உயிரிழந்தனர். மாரி மீது சென்னையில் திருட்டு வழக்கு உள்ளது.