பெரம்பூர்: செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர் ஜேஜேஆர்.நகர் 8வது தெருவை சேர்ந்தவர் சௌந்தர் (42). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா (37). இவர் கிண்டியில் உள்ள கார்ப்பரேஷனில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவர்களது மகள் தமிழ்ச்செல்வி (14). இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மற்றொரு மகள் ரிஷிகா (13) 9ம் வகுப்பு படித்தார்.
நேற்றுமுன்தினம் இரவு ரிஷிகா வீட்டின் வெளியே உட்கார்ந்து யாருடனோ செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதனால் தந்தை சௌந்தர் வந்து, ‘’ஏன் யாரும் இல்லாமல் தனியாக வெளியே உட்கார்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருக்கிறாய் உள்ளே சென்று பேச வேண்டியதுதானே’ என்று கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக தந்தை, மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு சிறுமி தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை தம்பதி வேலைக்கு சென்றபிறகு ரிஷிகா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வேலையில் இருந்து நேற்று மதியம் தாய் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் மேற்கூரையில் புடவையால் ரிஷிகா தூக்கிட்டு தற்கொலை செய்தது பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் எம்கேபி.நகர் போலீசார் சென்று ரிஷிகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.