நீட் முறைகேடு விவகாரம்: குஜராத், ஜார்க்கண்ட்டில் சிபிஐ அதிரடி விசாரணை


புதுடெல்லி: நாடு முழுவதும் நடந்த மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று குஜராத்தின் கேடா மற்றும் பஞ்ச்மஹால் மாவட்டங்களில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு சிபிஐ குழு சென்றனர். கேடா மாவட்டத்தில் வனக்போரி அனல் மின்நிலையம் அருகே செவாலியா-பாலசினோர் நெடுஞ்சாலையில் உள்ள ஜெய் ஜலராம் சர்வதேசப் பள்ளிக்கு சிபிஐ குழு முதலில் சென்று தகவல்களை சேகரித்தனர். கேடாவிலிருந்து, சிபிஐ குழு, பஞ்ச்மஹால் மாவட்டத்தின் கோத்ரா நகருக்கு அருகில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளிக்குச் சென்றது.

குஜராத், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் நீட் முறைகேடுகள் தொடர்பான 5 புதிய வழக்குகளின் விசாரணையை சிபிஐ எடுத்துக் கொண்டுள்ளது. இதே போல் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள ஒரு பள்ளிக்கு சிபிஐ குழு நேற்று சென்று பள்ளி முதல்வரிடம் விசாரணை நடத்தியது. ஹசாரிபாக்கில் உள்ள நீட் தேர்வு மையங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர் டாக்டர் எஹ்சானுல் ஹக்கிடம் சிபிஐ குழு பல மணி நேரம் விசாரித்து அவரை ஹசாரிபாக்கில் உள்ள சார்ஹிக்கு அழைத்துச் சென்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

வங்கியில் அடமானம் வைத்த நிலத்தை விற்க முயற்சி கேரள டிஜிபி மனைவியின் நிலம் ஜப்தி: திருவனந்தபுரம் நீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் நீதி நிர்வாகத்தை புதிய சட்டங்கள் சீர்குலைக்கும்: எதிர்கட்சிகள் விமர்சனம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சிறையில் இருந்து 18 கைதிகள் தப்பி ஓட்டம்