இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 12ம்தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 12 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வரும் விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகி ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எனவே தனிப்படை போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளனர். அதேபோல் இன்னொரு குழுவினர், வடமாநிலங்களில் முகாமிட்டு இருக்கலாம் என தேடி அங்கு சென்றுள்ளனர். இதனிடையே இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.