நாகப்பட்டினம்: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டினத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் தலைமையில் சித்தராமையா, சிவக்குமார் உருவ பொம்மையை எரித்து விவசாயிகள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரை கண்டித்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர். பின்னர் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன் கூறுகையில், ‘தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து வழங்க வேண்டிய 86 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனே வழங்க வேண்டும். காவிரி ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்’ என தெரிவித்தார்.