திண்டிவனம்: திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய சாதி வாரியாக இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் முதல் கோரிக்கை. தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம். முதல்வரை கோட்டையில் சந்தித்து நான் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் அது நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். ஏழு நாள் சாலை மறியல் போராட்டத்தை விட ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். என் பின்னால் ஒட்டுமொத்த வன்னியர் சமுதாயமும் போராட்டத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.