தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி எழுந்து, ‘தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கை குறித்து பேச அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதனால் பாமக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, ‘‘நீங்கள் சொல்கிற சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகத்தான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம்” என்றார். ஆனாலும் பாமகவினர் தொடர்ந்து பேச அனுமதி கேட்டு நின்றிருந்தனர். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ‘‘உங்கள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக முதல்வரே சொல்லிவிட்டார். இருக்கையில் அமருங்கள்’’ என்றார். ஆனால் இருக்கையில் அமராமல் ஜி.கே.மணி தலைமையில் பாமக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.