கடமலை மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி சீசன் தொடக்கம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: கொட்டை முந்திரி சீசன் தொடங்கியுள்ள நிலையில், விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொட்டை முந்திரி விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையின் காரணமாக மரங்களில் பூ, பிஞ்சுகளின் உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 மாதமாக மழை பெய்யாத காரணத்தால் தற்போது கொட்டை முந்திரியின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கடந்த வருடம் 60 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வந்த கொட்டை முந்திரி தற்போது 95 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் கொட்டை முந்திரியை பறிக்கும் பணிகளில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சீசன் தொடங்கிய முதல் வாரத்திலேயே கொட்டை முந்திரியின் விலை 90 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. மேலும் இந்த ஆண்டு உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் விலை இதே நிலை நீடித்தால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் கடந்த ஆண்டு விலை குறைவால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை ஈடு செய்யும் வகையில் கொட்டை முந்திரியின் விலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உரிய விலை நிர்ணயம் செய்து அரசே கொட்டை முந்திரியை கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது