சென்னை: டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு கூறி தற்போது அதிமுகவில் நிர்வாகியாக உள்ள பாஜ ஐடி விங்க் முன்னாள் நிர்வாகி நிர்மல் குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு தடை விதிக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், நிர்மல்குமார் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்து, 2023 ஏப்ரல் 12ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.