அதிமுக ஆட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு; பிடிஓக்கள் உட்பட 24 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு: திருவண்ணாமலை விஜிலென்ஸ் போலீசார் அதிரடி


திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, அரசு மானியத்தில் வீடு கட்டும் திட்டம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், பயனாளிகளை தேர்வு செய்து, வீடு கட்டி முடிக்கும் வரையிலான பணிகளை கண்காணித்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 2017-2018ம் நிதி ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக, அப்போதய ஆரணி தொகுதி எம்பி விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரணை செய்யும் லோக்ஆயுக்தா ஆணையத்தில், இது ெதாடர்பாக கடந்த 2020ம் ஆண்டு எம்பி விஷ்ணுபிரசாத் புகார் அளித்திருந்தார். அதில், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் (பிபிஎல்) பட்டியலில் இடம் பெற்றவர்களை தவிர்த்துவிட்டு, வசதியான நபர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர், அதற்கான ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக பொருளாதார கணக்கெடுப்பு பட்டியலில் இல்லாத நபர்களை, பயனாளிளாக சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதன் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசுக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், புகார் மனு மீது விசாரணை நடத்தி, நேற்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

அதன்படி, 2017-2018ம் ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில், பிடிஓ அலுவலகங்களில் பணிபுரிந்த வந்தவாசி பிடிஓ குப்புசாமி, தெள்ளார் பிடிஓ பரணிதரன், ஆரணி பிடிஓ சீனுவாசன், வந்தவாசி துணை பிடிஓ வில்வபதி, தெள்ளார் துணை பிடிஓ ஜி.ரவிச்சந்திரன், ஜவ்வாதுமலை துணை பிடிஓ அன்பழகன், வந்தவாசி உதவி பொறியாளர் ராமு, தெள்ளாறு உதவி பொறியாளர் கேசவன், ஜவ்வாதுமலை உதவி பொறியாளர்கள் தமிழ்செல்வன், நிர்மல்ராஜ், வந்தவாசி துணை பிடிஓக்கள் வெற்றிவேல், மணிகண்டன், தெள்ளார் துணை பிடிஓ மணிபாலன், ஜவ்வாதுமலை துணை பிடிஓக்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், வந்தவாசி ஓவர்சியர் கல்பனா, தெள்ளார் ஓவர்சியர் சக்திவேல், ஜவ்வாதுமலை ஓவர்சியர்கள் ஆனந்தகுமார்,

வீரபத்திரன், வந்தவாசி ஒன்றியம் ஒழப்பாக்கம் ஊராட்சி செயலாளர் சேகரன், கீழ்நர்மா ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், சித்தருகாவூர் ஊராட்சி செயலாளர் ராமஜெயம், ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, பலாமரத்தூர் ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகிய 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2017-2018ம் ஆண்டுகளில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை நேரில் விசாரணை செய்து, தகுதியுள்ள நபர்களா, எவ்வாறு இத்திட்டத்தில் இடம் பெற்றனர், ஆவணங்கள் சரியாக உள்ளதா, திட்ட நிதி முறையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன் முடிவில், உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது.

Related posts

யூடியூபர் சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரை கழகம்

பேரவையில் முதல்வர் தகவல் புதிதாக 7 இடங்களில் தீயணைப்பு நிலையம்

ஏராளமான கொலை, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஏ-பிளஸ் ரவுடி சீர்காழி சத்யா பின்னணி என்ன? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலம்