பெங்களூரு: ஷிவமொக்கா தொகுதி பாஜ வேட்பாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனும், எம்.பியுமான ராகவேந்திரா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய இரு கட்டங்களாக நடக்கிறது. இதனால் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சித்ரதுர்காவில் பாஜ சார்பில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஷிவமொக்கா தொகுதி பாஜ வேட்பாளரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகனுமான ராகவேந்திரா, வரும் மக்களவை தேர்தல் தேச விரோதிகளுக்கும் தேச பக்தர்களுக்கும் இடையேயான தர்ம யுத்தம் என்று குறிப்பிட்டு பேசினார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், தேச விரோதிகள் என்று பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், அதற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.