வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102.ரெட்டியூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(40), தக்காளி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து தக்காளியை வாங்கி வந்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்பேட்டையைச் சேர்ந்த பாஜ நகர இளைஞர் அணி தலைவரான ஜனார்த்தனன்(30) வந்து, கார்த்திக்கிடம் இலவசமாக தக்காளி கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக் பணம் கொடுத்தால்தான் தருவேன் எனக்கூறியுள்ளார்.
இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜனார்த்தனன், கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த கார்த்திக் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த தக்காளி வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, கார்த்திக்கை தாக்கிய பாஜ பிரமுகரான ஜனார்த்தனனை உடனடியாக கைது செய்யும்படி மனு அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.