வழக்குகளில் குறித்த காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த அருளப்பன், த 2009 பிப்ரவரி மாதம் பண்ணைக்கு வந்த லாரி மோதி மரணம் அடைந்தார். இதையடுத்து, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரது மனைவி வசந்தி சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். காப்பீடு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் குறிப்பிட்ட லாரி விபத்தில் ஈடுபடவில்லை. முதல் தகவல் அறிக்கையில் லாரியின் எண் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதை ஏற்று தீர்ப்பாயம், அருளப்பன் மனைவி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இந்திய தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரை காவல்துறை அதிகாரி விடுதலை செய்துள்ளார். தமிழக உள்துறை செயலாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிடப்படுகிறது. உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது குறித்து அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது தவறுதான். உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்கள் குறிப்பிட்ட லாரி விபத்தில் ஈடுபட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, வசந்தியின் மேல் முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. உரிய நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதி செய்யும் வகையில் அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மற்ற குற்ற வழக்குகளைப் போல் விபத்து வழக்குகளில் புலன் விசாரணை அதிகாரிகள் தீவிரம் காட்டுவதில்லை. அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு