மதுரை: தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசையுடன் ேமாதிய பெண் மீதான வழக்கை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு கடந்த 3.9.2019 அன்று விமானத்தில் சென்றபோது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டதாக அப்போதைய பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அளித்த புகாரில் லூயிஸ் சோபியா என்ற பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சோபியா மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதே நேரம் வழக்குப்பதிவு செய்த பின், எப்ஐஆரில் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான 505 (1) பிரிவை கையால் எழுதி சேர்த்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 120ல் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் பின்பற்றப்படவில்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.