சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமீறி பிரசாரம் செய்ததாக அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிராக பூலாங்குறிச்சி காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட திமுகவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, பெரிய கருப்பன் உள்ளிட்ட திமுகவினருக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.