திருவொற்றியூர்: கர்நாடக வியாபாரியிடம் ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடா ரெட்டி. பூசணிக்காய் விற்பனை மொத்த வியாபாரி. கர்நாடக மாநிலத்தில் இருந்து பூசணிக்காயை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மொத்தமாக அனுப்பி வைப்பது வழக்கம். இதற்கான பணத்தை வாங்க இவர் நேற்று முன்தினம் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.
பின்னர் இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட் சென்று பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் கர்நாடகாவிற்கு செல்ல மெட்ரோ ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து, வால்டாக்ஸ் சாலையில் நடந்து சென்ற போது, வழிமறித்த 3 பேர் வெங்கடா ரெட்டியிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். கையில் வைத்திருந்த செல்போன், அணிந்திருந்த வாட்ச், 1500 ரூபாய் மற்றும் ரூ.8 லட்சம் வைத்திருந்த பணப் பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வெங்கடா ரெட்டி பூக்கடை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சென்ட்ரல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.