Thursday, June 27, 2024
Home » இலங்கை தமிழ் பள்ளி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் திட்டம் 2256 பேர் பங்கேற்று பயன்

இலங்கை தமிழ் பள்ளி மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் திட்டம் 2256 பேர் பங்கேற்று பயன்

by Francis

சென்னை: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 57,772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 2023-24 ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2,256 மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி அரசு மாதிரி பள்ளிகளில் கடந்த மே 29ம் தேதி அன்று நடைபெற்றது. இத்திட்டத்தை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் துறையும் ஒருங்கிணைந்து நடத்தின. சென்னை நுங்கம்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் நடைபெற்ற இதன் தொடக்க நிகழ்வில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர் க.நந்தகுமார், மே 29அன்று தொடங்கி வைத்து, காணொளி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கல்வி பயில்வதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும்.

தாயகம் திரும்பிய தமிழர்களான முகாம் மாணவர்கள் நன்கு படித்து நல்ல பணியில் அமர்ந்து தங்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். முகாம் வாழ் மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி பயில்வதற்கு தேவையான செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும் என்று பேசினார். அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: முகாம் வாழ் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தகுந்த வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மாணவர்கள் இடைநிறுத்தம் இன்றி தொடர்ந்து கல்வி பயில வேண்டும் என்றார். இந்த பயிற்சி முகாமில், தமிழகம் முழுவதும் 103 முகாம்களை சேர்ந்த 2256 மாணவ, மாணவிகள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட மாதிரி பள்ளிகளில் இருந்தபடியே பங்கேற்று பயனடைந்தனர்.

 

You may also like

Leave a Comment

nineteen + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi