கார் மோதி சாலையை கடக்க முயன்ற 2 பேர் பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் மோதி பைக்கில் சாலையை கடக்க முயன்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மாமல்லபுரம் அடுத்த கருநீலம் காந்திநகர் சிங்கபெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (64), ரவி (62). இருவரும், நேற்று மாலை கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி ஒரு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, வட நெம்மேலி தனியார் ஓட்டல் அருகே வந்து இசிஆர் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி சாலையை கடக்க முயன்றபோது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி மின்னல் வேகமாக சென்ற கார் ஒன்று மோதி இருவரும் சினிமாவில் பறந்து விழுவது போல் தூக்கி வீசப்பட்டனர். இதில், பழனி மற்றும் ரவி 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.

இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவான காட்சியை வைத்து விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரம் அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை