Thursday, September 19, 2024
Home » கார்-லாரி நேருக்கு நேர் மோதல் குழந்தை உள்பட 5 பேர் நசுங்கி பலி

கார்-லாரி நேருக்கு நேர் மோதல் குழந்தை உள்பட 5 பேர் நசுங்கி பலி

by Ranjith

புவனகிரி: சிதம்பரம் அருகே நேற்று அதிகாலை காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த குழந்தை உள்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் இதயத்துல்லா. துபாயில் இருந்த இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக இவரது மைத்துனரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த முகமது அன்வர் (56) தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்றுள்ளார். இதயத்துல்லாவை பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த யாசர்அராபத் (40) ஓட்டினார்.

காரில் முகமது அன்வர், அவரது உறவினர்களான அதே கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிதாபேகம் (62), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹரபத்நிஷா (30), அவரது 3 வயது குழந்தை அப்னான் ஆகியோர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லூர் மேம்பாலத்தில் கார் வந்தபோது எதிரே சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற லாரி, நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி, முகம்மது அன்வர், ஹாஜிதாபேகம், ஹரபத் நிஷா, அப்னான் ஆகிய 4 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவர் யாசர் அராபத் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

4 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi